உள்நாட்டுப் போரால் உருக்குலைந்த சோமாலியா-பட்டினியில் வாடும் 1.13 கோடி மக்கள்
சோமாலியா நாட்டில், 1990-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்தது. அதன்பின் அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாத அமைப்புகள், வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுத்தனர். அதை மீறி உதவ வரும் தொண்டு நிறுவன ஊழியர்களையும் சுட்டுக் கொல்கிறார்கள்.
ஆயுதங்களுடன் பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு தனி பிரிவாக மாறி அவர்கள் நாட்டாமை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அரசு இல்லை, சட்டம் இல்லை, ஒழுங்கு இல்லை, எதுவுமே இல்லாத நிலையில் சோமாலியா உருக்குலைந்து போய் கிடக்கிறது.
கைகளில் துப்பாக்கியுடன் கடல் பகுதியைச் சுற்றி வரும் சோமாலியா கொள்ளையர்களால் உலக நாடுகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சோமாலியா மக்களும் பசி, பட்டினி, பஞ்சத்தில் பரிதவித்து வருகின்றனர்.
ஐ.நா.சபை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களால், அப்பகுதியில் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. தற்போது வறட்சியில் சிக்கி தவிக்கும் அந்நாட்டு மக்களில், தினமும் 6 பேர் பட்டினியால் பலியாகி வருகின்றனர். வறட்சியால், பக்கத்து நாடான எத்தியோப்பியாவுக்கு அகதிகளாக குடிபெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 90 சதவீத கால்நடைகளும் வறட்சியால் இறந்துவிட்டன.
சோமாலியாவுக்கு உடனடியாக உதவ, சர்வதேச நாடுகள் 2500 கோடி ரூபாயை அளிக்குமாறு ஐ.நா.சபை கேட்டுக் கொண்டுள்ளது.
வெட்டி நியாயம்,. வீராப்பாக பேசிக் கொண்டு, பணத்தை போருக்காக அநியாயமாக செலவிட்டு வரும் பணக்கார நாடுகள் நினைத்தால் ஒரே நாளில் சோமாலியாவை பசித் துயரத்திலிருந்து மீட்க முடியும். செய்ய நினைப்பார்களா அவர்கள்?