வீரபாண்டி ஆறுமுகம் பெங்களூரில் பதுங்கலா?: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை!
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்த 32 பேரை விரட்டிவிட்டுவிட்டு அவர்களது வீடுகளை வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் அபகரித்ததாக புகார் உள்ளது.
அதே போல சேலம் சாரதா கல்லூரி சாலையில் பிரிமியர் ரோலர் மாவு மில் நிலத்தை ஆக்கிரமித்ததாகவும் இன்னொரு புகார் உள்ளது.
திமுக ஆட்சியில் இந்த புகார்கள் கிடப்பில் போடப்பட்டன. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதில் நடவடிக்கை ஆரம்பமானது.
இது தொடர்பாக வீரபாண்டி ஆறுமுகம், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவரும் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான பாரப்பட்டி சுரேஷ்குமார் (கொலை வழக்குகளிலும் சிக்கியவர் இவர்), கவுசிக பூபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, மற்றும் ஜிம்.ராமு. மகேந்திரன், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிகடை பெருமாள், கொண்டலாம்பட்டி முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ. பாலகுரு மூர்த்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், கனகராஜ், கறிக்கடை பெருமாள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடிவருகிறார்கள். நில மீட்பு படை உதவி கமிஷனர் பிச்சை தலைமையில் ஒரு குழுவினர் சென்னையில் முற்றுகையிட்டுள்ளனர். மற்றொரு குழுவினர் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வீரபாண்டி ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.
இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் தமிழகத்திலேயே இல்லை என்றும், அவர் வெளி மாநிலத்தில் பதுங்கி உள்ளதாகவும் போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து தனிப்படை போலீசார் வெளி மாநிலம் ஒன்றிலும் முற்றுகையிட்டுள்ளனர். எந்த மாநிலம் என்று சொன்னால் அவர்கள் உஷாராகி விடுவார்கள் என்பதால் அதை போலீசார் கூற மறுக்கின்றனர்.
இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் கூறுகையில், வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவரைப்பற்றிய தகவல்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம் என்றார்.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகம் பெங்களூர் புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் கிருஷ்ணகிரி அருகே கிராணைட் குவாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசார் தேடுவதை அறிந்த வீரபாண்டி ஆறுமுகம் வேறு இடத்துக்கு தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.
இந்த முன் ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் ஆஜரான வக்கீல் என்.ஜோதி வாதிடுகையில், வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க. கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அந்தக் கட்சியின் செயற்குழு 23ம் தேதியன்றும், பொதுக்குழு 24ம் தேதியன்றும் கோவையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டங்களில் மனுதாரர் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அரசு தீவிரம் காட்டுகின்றனர். அவரை கைது செய்யக்கூடாது என்றார்.