போலி கல்விச் சான்றிதழ்: பிரச்சனையில் ராம்தேவ் உதவியாளர் பாலகிருஷ்ணா
வாரனாசி: யோகா குரு பாபா ராம்தேவின் முதன்மை உதவியாளரின் கல்விச் சான்றிதழ்கள் போலி என்று சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் அன்னா ஹஸாரே போன்று ஊழலுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். பின்னர் தனது உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டதை அடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். ஒரு புறம் பாபா ராம்தேவ் உலக அளவில் உண்ணாவிரதத்தால் பிரபலமாக மறு புறம் சிபிஐ அவரது கோடிக்கணக்கான சொத்து விவரங்களைத் தோண்ட ஆரம்பித்தது.
இந்த விசாரணை வளைத்தில் பாபா ராம்தேவின் முதன்மை உதவியாளர் பாலகிருஷ்ணாவும் சேர்க்கப்பட்டார். அவரது கல்விச் சான்றிதழ்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.
அந்த சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்த பல்கலைக்கழகத்திற்கு சென்று விசாரித்ததில் அவை போலி என்று தெரிய வந்தது.
இது குறித்து சம்பூர்ணா நந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரஜ்னிஷ் ஷுக்லா கூறகையில், "பாலாகிருஷ்ணாவின் கல்வித் தகுதி குறித்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் வந்திருந்தனர். 1991-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள உயர் நிலைக் கல்வித் தகுதியான பூர்வ் மதிமா மற்றும் 1996-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ள சமஸ்கிருத பட்டமான ஷாஸ்திரி ஆகிய இரண்டையும் பாலகிருஷ்ணா சமர்பித்திருந்தார்.
ஆனால் அத்தகைய சான்றிதழ்கள் வழங்கப்பட்ட ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. மேலும், அவர் குறிப்பிட்டுள்ள எண்கள் வேறொரு மாணவனுடையது.
இதையடுத்து தான் அவர் போலிச் சான்றிதழ்களை சமர்பித்துள்ளார் என்று சிபிஐ முடிவு செய்தது. பாலகிருஷ்ணாவின் சான்றிதழ்கள் போலி என்று பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துவிட்டார்," என்றார்.