கரூர் அருகே குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவிகள் பலி
கரூர்: கரூர் அருகே குளத்தில் விழுந்த தோழியை காப்பாற்ற முயன்ற 2 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் அருகே உள்ளது ஆத்தூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். கூலித் தொழிலாளி. இவரது மகள் கமலா தேவி (15). இப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் கௌசல்யா (12). ரவி என்பவரது மகள் ரம்யா (13). இவர்களும் இதே பள்ளியில் தான் படித்து வந்தனர். இந்த 3 பேரும் தோழிகள்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால், வீட்டின் அருகே இருக்கும் கல்குவாரியில் உள்ள குளம் போல் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது பாறை வழுக்கி ஆழமான பகுதிக்கு கௌசல்யா சென்றுவிட்டார். அவர் தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட, நீச்சல் தெரியாத கமலா தேவியும், ரம்யாவும் கௌசல்யாவை காப்பாற்ற நீரில் குதித்துள்ளனர். இதில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.