ஜப்பான், பபுவா நியு கினியா தீவுகளில் கடும் நிலநடுக்கம்
சிட்னி & டோக்கியோ: ஆஸ்திரேலியா அருகே உள்ள பபுவா நியு கினியா தீவுகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியு அயர்லாந்து தீவின் கவியங் நகருக்கு தெற்கே 69 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 39 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாகத் தகவல் இல்லை.
பசிபிக் கடலில் உள்ள இந்தத் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஜப்பானிலும்...
இந் நிலையில் ஏற்கனவே பூகம்பம், மற்றும் சுனாமி பாதித்த புகுஷிமாவின் வடகிழக்கு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.51 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய விடிய சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
6.2 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதும் ஏற்படவில்லை.
கடந்த மார்ச் 11ம் தேதி புகுஷிமா கடற்கரை பகுதியில் பூகம்பமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டதில் 20 ஆயிரம் பேர் பலியானதும், அங்குள்ள அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டு கதிர்வீச்சு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.