மொராக்கோவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 78 பேர் பலி
ரபாத்: மொராக்கோ நாட்டில் ராணுவ விமானம் மலையில் மோதி விழுந்து நொறுங்கியதில் 78 பேர் பலியானார்கள். இது ராணுவப் போக்குவரத்து விமானமாகும். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் 3 பேர் உயிர் தப்பியதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்கு சஹாராவுக்கு வெகு அருகே மலைப் பகுதியில் விபத்து நடந்தது.
விபத்துக்குள்ளான விமானத்தில் ராணுவத்தைச் சேர்ந்த 60 பேரும், 9 விமான ஊழியர்களும், 12 பொதுமக்களும் இருந்தனர். இவர்களில் 3 பேர் மட்டுமே படுகாயங்களுடன் உயிர் தப்பினர். மற்ற 78 பேரும் இறந்து விட்டனர்.
இதுவரை 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குலமிம் ராணுவ தளத்தில் இறங்குவதற்காக விமானம் நெருங்கிக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.
விபத்து நடந்த குலமிம் பகுதி மிகவும் வித்தியாசமானது. பாலைவனம், மலைகள், பள்ளத்தாக்கு என பல்வேறு பகுதிகள் அடங்கிய அபாயகரமான பிராந்தியமாகும் இது.