திட உணவு சாப்பிட மறுப்பதால் எடை குறைந்து வருகிறார் ஹோஸ்னி முபாரக்
கெய்ரோ: அதிபர் பதவியிலிருந்து விரட்டப்பட்டு, வீட்டுக் காவலில் இருந்து வரும் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், திட உணவுகள் உட்கொள்ள மறுத்து வருவதால், உடல் எடை குறைந்து, மோசமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டுமக்களின் தொடர் போராட்டத்தால், பதவி இழந்த எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தற்போது ஷார்மர்-அல்-ஷேக்கில் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 83 வயதாகும் முபாரக் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்து, “கோமா"விற்கு சென்றார்.
தொடர் சிகிச்சையில் உடல்நிலை தேறியுள்ள அவர் தற்போது மனஅழுத்த நோயினால் அவதிப்படுகிறார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்கள் கூறுகையில், திட உணவுகளை உட்கொள்ள மறுக்கும் முபாரக், பழச்சாறு போன்ற திரவங்களை மட்டுமே குடிக்கிறார். இதனால், அவரது உடல் நலம் மிகவும் மோசமடைந்து உள்ளது.
இந்த நிலையில், முபாரக் மீது தொடரப்பட்ட வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.