சவக் கிடங்கிலிருந்து உதவி கோரி வந்த குரல்- தென் ஆப்பிரிக்க சுடுகாட்டில் பரபரப்பு
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில், இறந்ததாக கருதப்பட்டவர் 1 நாளுக்கு பிறகு, பிணவறையில் சத்தமி்ட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோகன்னஸ்பர்க்கை சேர்ந்த ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 50 வயதுள்ள நபர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன் அவர் உடல் அசைவற்று கிடக்கவே, இறந்துவிட்டதாக கருதிய குடும்பத்தினர் சவக்கிடங்கு சேவையினருக்கு தகவல் அளித்தார். வீட்டிற்கு வந்த சவக்கிடங்கு பணியாளர்கள், உடலைப் பெற்றுக் கொண்டு இறந்த பல பிணங்களுடன் அந்த உடலையும் பாதுகாப்பு அறையின் பெட்டி ஒன்றிற்குள் வைத்தனர். சுமார் 21 மணிநேரத்திற்கு பின், மரண அமைதி நிலவும் பிணவறையில் இருந்து, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
அதைக் கேட்ட பிணவறை பாதுகாலவர்கள் சத்தமிடுவது ஆவியாக இருக்குமோ? என்ற பயத்தில் அந்த கட்டிடத்தை விட்டே ஓட்டம் பிடித்தனர். அபயக் குரல் தொடர்ந்து ஒலிக்கவே, தைரியத்தை வர வைத்து பிணவறையை திறந்து பார்த்தனர். அப்போது, பிணங்கள் அடுக்கி வைத்திருந்த பெட்டி ஒன்றில் இருந்து சத்தம் வருவது தெரிந்தது.
அந்தப் பெட்டியை திறந்து பார்த்த போது, 21 மணிநேரத்திற்கு முன் இறந்ததாக வைக்கப்பட்டவர் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். பயத்தோடு அவரை மீட்ட பிணவறை காவலர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த வீட்டினரின் சோகம் நீங்கி, மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி சிஸ்வி குப்பிலோ கூறுகையில், பிணவறையில் மீட்கப்பட்ட அந்த நபர் ஏறக்குறைய 1 நாள் முழுவதும் கடும் குளிர் அறையில் வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நலக் குறைவில் கிடந்த நபரை இறந்ததாக கூறிய குடும்பத்தினர் எச்சரித்து அனுப்பப்பட்டனர். ஒருவர் இறந்துவிட்டதாக மக்கள் கூறினாலும், டாக்டர்கள், அவசர கால மருத்துவ பணியாளர்கள், போலீஸார் உள்ளிட்டோர் தகுந்த சோதனைக்கு பிறகே, பிணவறைக்கு பாதுகாக்க அனுப்ப வேண்டும். அதிகாரிகள் கவனக்குறைவாக நடந்துக் கொண்டது வருத்தம் அளிக்கிறது, என்றார்.