20 ஆண்டு போராட்டத்தை வென்ற மூதாட்டி- மாதம் ரூ. 2000 ஓய்வூதியம் வழங்க உத்தரவு
செங்கோட்டை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் சுப்பம்மாள். இவரது கணவர் ராமையா தேவர். இவர் 1954ம் ஆண்டு தமிழக எல்லைகளை பிரிக்கும் போது செங்கோட்டையை தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ சட்டநாத கரையாளர் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது ராமையா தேவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு 5 வாரங்கள் ஜெயிலில் இருந்தார். இதனை அடுத்து மொழிபோர் தியாகிகளுக்கான ஓய்வூதியம் கேட்டு ராமையா தேவர அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் அவர் கடந்த 1991ம் ஆண்டு இறந்து விட்டார். அதன் பின்பு அவரது மனைவி சுப்பம்மாள் குடும்ப ஓய்வூதியம் கேட்டு அரசிற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் சுப்பம்மாள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரருக்கு 3 மாதத்திற்குள் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு தமிழ்வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி துறை செங்கோட்டையை சேர்ந்த ராமையாத் தேவர் என்பவரின் மனைவி சுப்பம்மாளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும், மருத்துவ படியாக 15 ரூபாயும் வழங்க ஆணை பிறப்பித்தது. 20 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு செங்கோட்டையை சேர்ந்த மூதாட்டி சுப்பம்மாள் குடும்ப ஓய்வூதியம் பெற்றது அவரையும், அவரது குடும்பத்தாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.