சுங்கச் சாவடி ஊழியரை சாதிப் பெயர் சொல்லித் திட்டிய வழக்கில் பாமக மாஜி எம்எல்ஏ கைது
சேலம்: சுங்கச் சாவடி ஊழியரைத் தாக்கி அவரது சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே நில அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஓமலூர் பாமக முன்னாள் எம்எல்ஏ தமிழரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவரை ஆகஸ்ட் 13ம் தேதி வரை காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தமிழரசு. இவர் மீது நில அபகரிப்புப் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தமிழரசு தலைமறைவானார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் விரைந்து சென்று கைது செய்து கொண்டு வந்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது தமிழரசு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு சுங்கச் சாவடி ஊழியரைத் தாக்கி அவரது சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக தமிழரசு மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அவரைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து தமிழரசை ஆகஸ்ட் 13ம தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.