தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் மூலம் கடந்தாண்டு ரூ.20 கோடி வசூல்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், ஒரு கல்லறையாக இருந்தபோதும், அது உலக மக்களால் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. முகலாய பேரரசர் ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டியதுதான் தாஜ்மஹால்.
ஆக்ராவில் உள்ள யமுனை நதியின் கரையில் 1653ம் ஆண்டு கலை வேலைப்பாடுகளுடன் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகால், இன்று வரை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது.
இந்த இடத்தைப் பார்ப்பதை விட வந்து நின்று உணர்வுகளை உள் வாங்கிச் செல்வதையே அனைவரும் முக்கியமாக கருதுகின்றனர். இதை கலைநயம் மிக்க கட்டடமாக மட்டும் பார்க்காமல், காதல் உணர்வுகளின் வெளிப்படாகவே அனைவரும் கருதுகின்றனர். அதனால்தான் தாஜ்மஹாலுக்கு இத்தனை ஆண்டுகள் ஆன போதும் மவுசு குறையாமல் உள்ளது.
உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். தாஜ்மகாலை காண, நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நுழைவுக் கட்டணம் மூலம் கடந்த நிதியாண்டில் சுற்றுலா துறைக்கு 20 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 3 கோடி அதிகமாகும். கடந்த 2009-10 நிதியாண்டில், 17 கோடி ரூபாயும், 2008-09ம் ஆண்டில், 15 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்தது.
தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போல, ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி, அக்பர் நினைவிடம் ஆகிய சுற்றுலா தளங்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதேபோல டெல்லி குதுப்மினார் வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கடந்தாண்டு 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில்கள் மூலம், கடந்தாண்டு, 2.5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.