நெல்லையில் ஒரே நாளில் விநாயகர், மாதா சிலைகள் அகற்றம்: பரபரப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் ஆழ்வார்குறிச்சி பகுதியில் ஒரே நாளில் விநாயகர்-மாதா சிலைகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சேரன்மகாதேவி அருகே உள்ள ஒப்பிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மனைவி நூர்ஜகான் பேரில் அங்கு 2 சென்ட் வீட்டு மனை உள்ளது. அந்த இடத்தையொட்டி உள்ள புறம்போக்கு இடத்தையும் நூர்ஜகான் குடும்பத்தினர் வேலி போ்ட்டு அடைத்து அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அந்த புறம்போக்கு நிலம் கிராமத்துக்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் நேற்று திடீரென்று ஒரு விநாயகர் சிலையை வைத்து பூஜையும் தொடங்கினர்.
இதனால் சிவன் ஆதரவாளர்களுக்கும், பீர்முகமது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதன் பேரில் அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டது.
ஆழ்வார்குறிச்சி அருகே டாட்டன்பட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் சிவசைலநாதர் கோயிலுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. நீண்ட நாட்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்த அந்த இடத்தில் டாட்டன் பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு மாதா சிலையை வைத்து வணங்கத் தொடங்கினர். இதற்கு அந்த பகுதியில் உள்ள மற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தாசில்தார் சுப்பிரமணியன், டிஎஸ்பி சங்கரலிங்கம் ஆகியோர் விரைந்து சென்று மாதா சொரூபத்தை அகற்றி அந்த இடத்தை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.