ஆகஸ்ட் 3ம் தேதி லோக்பால் மசோதா தாக்கல்
டெல்லி: ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க வகை செய்யும் 'லோக்பால்' மசோதா வரும் ஆகஸ்ட் 3ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து, அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில், "ஆகஸ்ட் முதல் வாரத்தில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் முதல் தேதி பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் துவங்குவதால், 2 அல்லது 3ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்படலாம். அடுத்த மாதம் இறுதிக்குள் பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வு முடிந்தால், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் இறுதிக்குள் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
மொத்தம் 22 நாட்கள் நடக்க உள்ள இந்த கூட்டத் தொடரில், 35 மசோதாக்களும், லோக்பால் தவிர பல முக்கிய சட்டங்களும் தாக்கல் செய்யப்படுகிறது. தெலுங்கானா விவகாரத்தில் எம்.பி.க்களின் ராஜினாமா குறித்து, சபாநாயகரே முடிவெடுப்பார்.
தற்போதைய லோக்பால் மசோதாவை குறை கூறிவரும் அன்னா ஹசாரே உள்ளிட்டோர், மற்றவர்களின் கருத்துகளை மதிக்க வேண்டும். எந்த பிரச்சனைக்காகவும் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை", என்றார்.
நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட லோக்பால் மசோதாவில், அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர் குழுவின் கருத்துகளை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே, வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர கோரி, ஆகஸ்ட் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். ஆனால், அதற்கு டெல்லியில் தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.