அறிவிக்கப்பட்ட புது ரயில்கள் செப்டம்பருக்குள் இயக்கப்படும்-ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட 1 மற்றும் 2 வது பிளாட்பாரங்கள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் முனியப்பா கூறியதாவது:
சென்னை-பெங்களூர், சென்னை-கோவை, கோவை-எர்ணாகுளம் ஆகிய 3 வழித்தடங்களில் அதிவேக பயணிகள் போக்குவரத்திற்கான தனிப்பட்ட ரயில்பாதை அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. அதிவேக ரயில் பாதையில், மணிக்கு 100 முதல் 150 கிமீ., வேகத்தில் ரயில்கள் பயணிக்கும்.
இதேபோல, கொல்கத்தா-சென்னை, சென்னை-மும்பை, புதுடெல்லி-சென்னை, சென்னை-கோவை உள்ளிட்ட 4 வழித்தடங்களில் சரக்கு போக்குவரத்திற்கென தனி ரயில் பாதைகள் அமைக்கவும் ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
புதுடெல்லி-மும்பை, மும்பை-கொல்கத்தா இடையே சரக்கு போக்குவரத்திற்கான தனி ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை-அரியலூர் இடையே தனியார் பங்களிப்புடன் ரயில்பாதை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 2010-11ம் நிதியாண்டில், இந்திய ரயில்வேயின் மொத்த வருவாய் 4,789.43 கோடி ரூபாய். இது கடந்தாண்டை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகம்.
கடந்த 2011-12ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தென்னக ரயில்வேயின் 16 புதிய ரயில்களில், 5 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதத்திற்குள் மீதமுள்ள 11 ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும். தென்னக ரயில்வேயில் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த 2,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை வழித்தடத்தில் சென்னைக்கு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் அகலப் பாதையில் தினமும் இயக்க தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. இதுகுறித்து பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.