முதல்வர் தேர்வில் குழப்பம்-கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைகிறார்கள்
எதியூரப்பா பக்கம் தற்போது கிட்டத்தட்ட 70 எம்.எல்.ஏக்கள் வரை இருப்பதால் அவரது நிபந்தனையை தட்ட முடியாத நிலையில் பாஜக மேலிடம் உள்ளது. ஆனால் அதே அளவில் கணிசமான எம்.எல்.ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் யாரை முதல்வராக்குவது என்பதில் குழப்பம் நிலவுகிறது.
சுரங்க ஊழலில் சிக்கி பதவியிழந்த எதியூரப்பா பெரும் இழுபறிக்குப் பின்னர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மட்டும் ராஜ்பவனுக்குப் போகாமல் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் 78 பேரையும் ஊர்வலமாக அழைத்துச் சென்று தனது பலத்தைக் காட்டி பாஜக மேலிடத்திற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
சதானந்த கெளடாவை முதல்வராக்க வேண்டும் என்பது மட்டுமே தனது ஒரே கோரிக்கை என்றும் எதியூரப்பா தெரிவித்துள்ளார். அவரையே முதல்வராக்க பாஜக மேலிடமும் தீர்மானித்தது. ஆனால் திடீரென அனந்தகுமாருக்கு ஆதரவாக கணிசமான எம்.எல்.ஏக்கள் குரல் கொடுத்திருப்பதால் பாஜக மேலிடம் குழம்பியுள்ளது.
இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அனைவரையும் நாளை டெல்லிக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அனைவரும் நாளை டெல்லி செல்கிறார்கள். அங்கு தனித் தனியாக எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்க பாஜக மேலிடம் தீர்மானித்துள்ளது.
அதன் பின்னர் வருகிற 3ம் தேதி பெங்களூரில் புதிய முதல்வர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.