மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கும் விஏஓ அலுவலகங்கள்- மக்கள் படும் அவதி!
கடந்த ஆட்சி காலத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி முலம் புதிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டது.
அனைத்து வசதிகளும் கொண்ட விஏஓ அலுவலகம் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் சேவை அளிக்கப்பட்டது. பகல் நேரங்களில் விஏஓக்கள் மணல் கடத்தலை தடுப்பது, சான்றிதழ் வழங்க வேண்டிய நபர் குறித்து விசாரிப்பது, என பல்வேறு பணிகளில் ஈடுபடுவதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் தான் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவது உள்பட அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆனால் செங்கோட்டை தாலுகாவை சேர்ந்த தேன்பொத்தை, புதூர், கற்குடி, பிரனுர், வல்லம், குன்னகுடி, விஸ்வநாதபுரம் உள்பட பல்வேறு கிராம நிர்வாக அலுவலகங்களில் பல ஆண்டுகளாக மின் இணைப்பே இல்லாததால் விஏஓக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும் மின் இணைப்புகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நவீன கம்யூட்டர் யுகத்தில் இப்படி, மின்சாரம் இல்லாத விஏஓ அலுவலகம் செயல்படுவது குறித்து மக்கள் அதிர்ச்சியுடன் உள்ளனர்.