யாரையும் நீக்கப் போவதில்லை: ஹெச்எஸ்பிசி தலைவர்
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஹெச்எஸ்பிசி. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே 5 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து வங்கியின் தலைவர் கூறியதாவது,
நாங்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பப் போவதில்லை. ஏற்கனவே காலியாக இருக்கும் இடங்களுக்கே ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. பொருளாதாரம் மேலும் வளர்ந்தால் நாங்கள் இன்னும் அதிகமானோரை பணியமர்த்துவோம். மொத்த உற்பத்தி 7.5 சதவீதமாக இருந்தால் நல்லது. இந்தியாவின் மொத்த உற்பத்தி அதே அளவில் தான் உள்ளது. அதனால் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
இந்தியா முழுவதும் அதிக ஆட்களை எடுப்போம் என்று உறுதியளிக்க முடியாது. வங்கி சீரமைப்பின் ஒரு பகுதியாக கடன் மீட்புப் பிரிவில் உள்ள ஒரு சிலரை மட்டும் வங்கியின் பிற பிரிவில் சேருமாறு கூறினோம் என்றார்.