ஏர்செல் விவகாரம் தொடர்பாக விரைவில் தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை
டெல்லி: ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திடம் அதை விற்குமாறு நிர்ப்பந்தம் செய்தது தொடர்பான விவகாரத்தில் விரைவில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் லேட்டஸ்டாக சிக்கியவர் தயாநிதி மாறன். சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது அந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்தபோது அதை வழங்காமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்தார் தயாநிதி மாறன் என்பது ஒரு குற்றச்சாட்டு.
மேலும் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்குமாறு நிர்ப்பந்தம் செய்தார் என்றும், அவ்வாறு விற்கப்பட்டவுடன் ஏர் செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை படு வேகமாக வழங்கினார் என்பதும் குற்றச்சாட்டு.
இந்த சர்ச்சை தொடர்பாக சிவசங்கரன் விரிவான வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முடிவு செய்தது. இதுகுறித்து பிரதமரிடம் அதுஅனுமதியும் கோரியது. இதையடுத்து பிரதமரின் உத்தரவின் பேரில் தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை நடத்த தயாராகி விட்டது. விரைவில் அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்ரன.
தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்திய பின்னர் சிபிஐ, ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது 3வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்.