விலைவாசி உயர்வுக்கு ஊழல்தான் மிகப் பெரிய காரணம்- பாஜக சாடல்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் பெரும் அமளியுடன் தொடங்கின. முதல் இரு நாட்களும் இரு சபைகளிலும் ஒரு அலுவலும் நடக்கவில்லை. விலைவாசி உயர்வுப் பிரச்சினை, ஊழல் பிரச்சினைகள் குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கோரி போராட்டத்தில் குதித்தன. இதனால் இரு நாட்களும் சபையி்ல ஒரு அலுவலும் நடைபெறவில்லை.
இந்த நிலையில், இரு அவைகளிலும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த மத்திய அரசு நேற்று ஒப்புக் கொண்டது. இதையடுத்து இன்று லோக்சபாவில் விவாதம் தொடங்கியது. அடுத்த வாரம் ராஜ்யசபாவிலும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெறவுள்ளது.
காலையில் கேள்வி நேரம் லோக்சபாவில் நடந்தது. அது முடிந்ததும் பிற்பகலில் விவாதம் தொடங்கியது. பாஜக சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் தொடங்கியது. முதலில் பாஜக உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா பேசினார்.
யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், விலைவாசி உயர்வைத் தடுக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இன்று பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.
பெருகி வரும் ஊழல்கள்தான் விலைவாசி உயர்வுக்கு மிக முக்கியக்காரணம், ஊழலைத் தடுக்க முடியாததால்தான் இன்று விலைவாசி உயர்வையும் மத்திய அரசால் தடுக்க முடியவில்லை.
ஒருபக்கம் பற்றாக்குறை நிலவுகிறது. மறுபக்கமோ உணவு தானியங்கள் கிட்டங்கிகளில் வீணாகி அழுகிக் கொண்டிருக்கின்றன. ஏன் இவற்றை ஏழைகளுக்கு அரசு தரக் கூடாது.
விலைவாசி உயர்வுக்கு ஒரு வளர்ச்சி வித்திடுமானால், அத்தகைய வளர்ச்சியே நமக்குத் தேவையில்லை என்றார் சின்ஹா.
விவாதம் தொடர்கிறது. விவாதத்தின் இறுதியில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளிப்பார். அதன் பின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்.