ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி 9-ம் தேதி தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்பாட்டம்
குற்றாலம்: இலங்கை தமிழர்களுக்கு சம உரி்மை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து மாகாண சுயாட்சி வழங்க வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். இறுதி கட்டப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேட்சை அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம். சமச்சீர் கல்வியை பொருத்தவரை பொது பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதலே அமுல் படுத்த வேண்டும் என்று துவக்கத்திலிருந்தே தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம்.
விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறுவதை தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும். பன்னாட்டு தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.