விளாத்திகுளம் அருகே சுதந்திரப் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு செருப்பு மாலை
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் படத்துக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் - கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்நத்தம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமை அன்று கிராம மக்கள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இதற்காக ஜூலை 16 ம் தேதி நடந்த ஊர்க் கூட்டத்தில் ஆடிப் பொங்கலை முன்னிட்டு யாரும் டிஜிட்டல் போர்டு வைக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதை அனைத்து சமுகத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த நற்பணி மன்ற போர்டில் உள்ள வ.உ. சிதம்பரனார் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் வ.உ. சிதம்பரனார் படம் அவமதிக்கப்பட்டதால் ஊர் மக்கள் கொதிப்படைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.