விலைவாசி உயர்வு குறித்து விவாதிப்பதோடு சரி, நடவடிக்கை எடுப்பதில்லை: திமுக
டெல்லி: நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிப்பதோடு சரி, விவாதத்தின்போது எடுக்கப்படும் முடிவுகளை அரசு செயல்படுத்துவதில்லை என்று மக்களவை திமுக உறுப்பினர் டி.கே. எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
நேற்று மக்களவையில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டது. காலையில் கேள்வி நேரம் நடந்தது. அது முடிந்ததும் பிற்பகலில் விவாதம் தொடங்கியது. பாஜக சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் தொடங்கியது. முதலில் பாஜக உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா பேசினார்.
யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், விலைவாசி உயர்வைத் தடுக்க மத்திய அரசு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இன்று பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது என்றார்.
பின்னர் மூத்த திமுக தலைவரான டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில்,
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியின்போது இடைத்தரகர்களை ஒழிக்கவும், விவசாயிகள் நேரடியாக பயனடையவும் உழவர் சந்தை தொடங்கி நடத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை கொண்டு வருமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்திலும் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால் விவாதத்தின்போது எடுக்கப்படும் முடிவுகளை அரசு செயல்படுத்துவதில்லை.
அரசு இந்த விவாதத்தை வெறும் சடங்காக நினைக்கக் கூடாது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இருப்பது போன்று நாடு முழுவதும் பொது விநியோக திட்டம் மற்றும் உழவர் சந்தைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.