சீனாவில் பரவுகிறது ரேபீஸ்-நாய் வளர்க்கத் தடை-கொல்லவும் உத்தரவு
ஜியான்மென்: சீனாவின் ஜியான்மென் மாகாணத்தில் ரேபீஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் பரவி வருகிறது. இதையடுத்து நாய்கள் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதிக்குள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பிடிபடும் நாய்கள் கொல்லப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஜியான்மென் மாகாணத்தில், சமீபக்காலமாக ரேபீஸ் தாக்கிய நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த 3 ஆண்டுகளில் நாய்கள் கடித்து 42 பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நாய்க்கடியால் காயமுற்று அவதிக்குள்ளாகினர். இதையடுத்து நாய்களின் வளர்ப்பிற்கு சீன அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து சட்டம் இயற்றியுள்ளது.
இதன்படி, வரும் 10ம் தேதியில் இருந்து 26ம் தேதிக்குள் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் அவற்றை அகற்ற வேண்டும். அதன்பின் நடத்தும் தேடலில் சிக்கும் நாய்கள் கொல்லப்படும். இந்த வகையில் சுமார் 30 ஆயிரம் நாய்களை கொன்று குவிக்க, சீன அரசு முடிவு செய்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் மேலும் கூறுகையில், நாய்களை கொல்வது எங்கள் நோக்கமல்ல. நகரில் இருந்து அதிக அளவிலான நாய்களை அகற்றுவதன் மூலம், தகுந்த வாழிடத்தை உருவாக்க முடியும்.
நாய்களை வளர்ப்பவர்கள் எங்களுடன் இந்த காரியத்தில் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். விதிக்கப்பட்ட கெடு நாட்களை கடந்த நிலையில் நாய்கள் வளர்த்தால், உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும், என்றனர்.
நாய்களை வளர்க்க விதிக்கப்பட்ட கட்டுபாடுகளால் நாய் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சீனாவில் ஆண்டுதோறும் 2,400க்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் இறப்பதாக, அந்நாட்டு சுகாதாரத் துறைத் தெரிவித்துள்ளது.