நில அபகரிப்பு- கொலை மிரட்டல்: மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மீது போலீசில் புகார்
சென்னை விருகம்பாக்கம் யாதவாள் தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பசுபதி. இவர் தனக்குச் சொந்தமான வளசரவாக்கத்தில் உள்ள 15 கோடி ரூபாய் மதிப்பிலான 48.35 செண்ட் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து பறித்துக்கொண்டதாக வன்னியர் பேரவை பொதுச் செயலாளர் ஜெயராமன் மீது சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் இதைத் தட்டிக் கேட்டபோது, ஜெயராமனும், வன்னியர் பேரவை தலைவரும், திமுக மத்திய செய்தித்துறை இணையமைச்சருமான ஜெகத்ரட்சகனும் அடியாட்களும் தன்னைக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், இவர்களைக் கைது செய்து என்னுடைய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது.
நில அபகரிப்பு-முன்னாள் பாமக எம்.எல்.ஏ. தலைமறைவு:
சேலம் மாவட்டம் கோட்டைக்கவுண்டம்பட்டி சித்தன், பொன்னுவேல், அண்ணாமலை ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை பாமகவை சேர்ந்த மோகன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். அப்போது தங்களது நிலத்திற்கு பக்கத்தில் இருந்த வரதராஜன் என்பவருக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தையும், தங்களுக்கு சொந்தமானது போல, போலி ஆவணங்கள் தயாரித்து அதையும் மோகனுக்கு விற்றுள்ளனர்.
மோகனிடம் இருந்து அந்த 5 ஏக்கர் நிலத்தையும் பாமகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி வாங்கியுள்ளதாகவும், அதில், தனது மூன்றரை ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் சேலம் மாவட்ட நில அபகரிப்பு காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.,
இதில் சித்தன் இறந்துவிட்டதால், அவரை தவிர்த்து பொன்னுவேல், அண்ணாமலி, மோகன், கார்த்திக் ஆகிய நால்வர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தியை கைது செய்ய போலீசார் அவர் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அதற்குள் தலைமறைவாகிவிட்டார்.
சக்சேனாவை கஷ்டடியில் எடுக்க திருப்பூர் போலீஸ் திட்டம்:
இந் நிலையில் உடுமலையில் பேப்பர் மில்லை அபகரிக்க முயன்றதாக தாக்கலாகியுள்ள வழக்கில், சன் டிவி நிர்வாக இயக்குனர் சக்ஸேனாவை காவலில் எடுத்து விசாரிக்க திருப்பூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவை காளப்பட்டியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி. இவருக்குச் சொந்தமான பேப்பர் மில்லை, இரு ஆண்டுகளுக்கு முன், உடுமலையைச் சேர்ந்த சீனிவாசனுக்கு, 12.10 கோடி ரூபாய்க்கு விற்றார். சீனிவாசனின் கட்டுப்பாட்டுக்கு வந்த பின், அந்த மில்லின் வருவாய் பெருகியதால், மில்லை அபகரிக்க கிங்ஸ்லி திட்டமிட்டார்.
இவரும், சேப்பாக்கம் தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், சன் டிவி முதன்மை நிர்வாக அலுவலர் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் உள்ளிட்ட 8 பேர், சீனிவாசனை நேரில் வரவழைத்து மிரட்டி, மில்லை எழுதி வாங்கியதாக புகார் தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடந்த 30ம் தேதி எம்.எல்.ஏ., அன்பழகனையும், பேப்பர் மில் முன்னாள் உரிமையாளர் கிங்ஸ்லியையும் கைது செய்தனர்.
மேலும் புழல் சிறையில் உள்ள சக்சேனா மற்றும் அய்யப்பனை, ஜெயில் வார்டன் முன்னிலையில் கைது செய்தனர்.
மோசடி வழக்குகளில் ஏற்கனவே கைதாகி, புழல் சிறையில் அவர்கள் இருப்பதால், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்த பின், சக்சேனா மற்றும் அய்யப்பனை தங்கள் காவலில் எடுத்து, மில் அபகரிப்பு குறித்து விசாரணை நடத்த திருப்பூர் போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.