சிறையில் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்த ஸ்டாலின்-பொங்கலூர் பழனிச்சாமியின் உதவியாளர் கைது
கோவை: நிலஅபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா மற்றும் சென்னை திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்., ஈரோடு மேயர் குமார் முருகேஷ், தி.மு.க. பிரமுகர்கள் விஸ்வநாதன், ஆனந்தன், மீன்கடை சிவா, நாகராஜ், பசுபதி ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை சந்திக்க தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இன்று காலை 9.20 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தார்.
பின்னர் சிறைக்குச் சென்ற அவர் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, ஜே.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தி.மு.க.வினரை சந்தித்தார்.
நிலப்பறிப்பு வழக்கில் பொங்கலூர் பழனிச்சாமியின் உதவியாளர் கைது:
இந் நிலையில் நிலப்பறிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உதவியாளர் நாகராஜன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மில் அபகரிப்பு வழக்கு-9 பேருக்கு முன் ஜாமீன்:
இந் நிலையில் சேலத்தில் உள்ள பிரீமியல் ரோலர் பிளவர் மில் அபகரிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரூ. 30 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சீனிவாசன் உள்ளிட்ட 12 பேர் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி ராஜசூர்யா விசாரித்து, சீனிவாசன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். சேலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 10 நாட்களுக்குள் ஆஜராகி, முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், புலன்விசாரணைக்கு தேவைப்படும் போது போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
முன்னாள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், எஸ்.துரைசாமி, சி.துரைசாமி ஆகியோர், வரும் 9ம் தேதி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும்; அவர்களை 11ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கலாம்; 11ம் தேதி மாலை 5 மணிக்கு சேலம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அங்கு அவர்கள் முன் ஜாமீன் பெறலாம் என்றும் நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டார்.,
முன்னதாக இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் இந்த வழக்கில் முன் ஜாமீன் கிடைத்ததும், ஆனால் இன்னொரு வழக்கி்ல் அவரை போலீசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மரபுப்படியே திமுகவுக்கு இருக்கை ஒதுக்கீடு-சபாநாயகர்:
இந் நிலையில் சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களுக்கு மரபுப்படிதான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு ஒரே பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்படாவிட்டால் பேரவைக் கூட்டத்தை புறக்கணிப்போம் என்று திமுக நேற்று அறிவித்தது.
ஆனால், அவர்களுக்கு மரபுப்படிதான் இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் செப்டம்பர் 14ம் தேதி வரை சட்டசபைக் கூட்டம் நடைபெறும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.