வேளச்சேரி - மாதவரத்தில் புதிய பேருந்து நிலையங்கள்!
சென்னை புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி.) கோயம்பேட்டில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 2,500-க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநில பேருந்துகளும் கோயம்பேட்டிற்கு வந்து செல்கின்றன. பயணிகளை ஏற்ற 6 பகுதிகளாக பிரித்து பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. தினமும் 2 லட்சத்திற்கும் மேலான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். இது தவிர மாநகர பேருந்துகள் வந்து செல்ல பேருந்து நிலையத்தின் முன்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு தனி பேருந்து நிலையம் உள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வருவதிலும் உள்ளே செல்வதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
முக்கியமாக 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மெட்ரோ ரெயில் பணி நடந்து வருவதால் வெளியூர் பேருந்துகள் தாம்பரம், கிண்டி வழியாக கோயம்பேட்டிற்கு வருவதற்கு தற்போது அனுமதி இல்லை. அனைத்து பேருந்துகளும் பைபாஸ் வழியாக மதுரவாயல் வந்து பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருகிறது.
ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்தால் நெரிசல் ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க முடியும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) கருதுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வாகனங்களின் ஒரு பகுதியை நகருக்குள் விடாமல் நகரின் வெளிப்பகுதியில் நிறுத்த முடிவு செய்யப்படுகிறது.
வேளச்சேரி...
அந்த வகையில் வேளச்சேரி மற்றும் மாதவரம் ஆகிய இரண்டு இடங்களில் பஸ்களை நிறுத்தி அங்கேயே பயணிகளை ஏற்றிச் செல்ல 2 பேருந்து நிலையங்கள் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை வழியாக புதுச்சேரிக்கு தினமும் 300 பேருந்துகள் செல்கின்றன.
மாதவரம்
இந்த பேருந்துகளை வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. ஜி.என்.டி. சாலை வழியாக கோயம்பேட்டிற்கு செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தையும் மாதவரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் வகையில் புதிய நிலையம் அமைக்கப்படுகிறது.
மாதவரத்தில் இருந்து 200 பேருந்துகளும், வேளச்சேரியில் இருந்து 300 பேருந்துகளும் தினமும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய பேருந்து நிலையங்களிலும் அனைத்து வசதிகளும் பயணிகளுக்கு செய்து தரப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ளது போலவே பேருந்து நிறுத்துவதற்கு வசதியான இடமும், பெரிய அலுவலகமும், கடைகள், பயணிகள் உட்காருவதற்கு இருக்கைகள் என அனைத்து வசதிகளும் இந்த இரு புதிய பேருந்து நிலையங்களிலும் செய்து தரப்படும்.