சென்னை தி.நகர் சாலையில் கிடந்த ரூ. 17,000 பணம்-போலீஸில் ஒப்படைப்பு
சென்னை: சென்னை, தி.நகரில், சாலையில் கேட்பாரற்று கிடந்த, 17 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சென்னையின் முக்கிய வாணிகப் பகுதி தி.நகர். இங்கு விடுமுறை மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகளவிலான மக்கள் வந்து செல்வதால், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமுள்ள மாலை நேரத்தில், போக்குவரத்து எஸ்.ஐ., பாண்டிவேலு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். சில சாலைகளில் ரோந்து பணி முடித்து, போத்தீஸ் ஜவுளிக் கடை அருகே, கரூர் வைஸ்சியா வங்கி ஏ.டி.எம்., அருகே வந்தபோது, பணம் கத்தை கத்தையாக, கேட்பாராற்று சாலையில் கிடந்ததைப் பார்த்தார்.
உடனடியாக அதை எடுத்து எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ. 17,000 பணம் இருந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதுவரை அந்தப் பணத்தைக் கோரி யாரும் புகார் கூறவில்லை என்று தெரிகிறது.