ஷீலா தீட்சித்தைக் குறி வைத்து நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் பாஜக-தவிப்பில் அரசு
டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஷீலா தீட்சித் மீது கடும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி முறைகேடுகளில் ஷீலா தீட்சித் ஈடுபட்டதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் கடும் தவிப்புக்குள்ளாகியுள்ளன. ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஷீலாவைக் காப்பாற்றத் துடிப்பதாக காங்கிரஸையும் அது கடுமையாக சாடி வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் நாளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது. கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி உயர்வுப் பிரச்சினை, லோக்பால் மசோதா உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்குள்ளானது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. இந்த நிலையில் தற்போது ஷீலா தீட்சித் மூலம் புதுப் பிரச்சினை உருவெடுத்துள்ளது.
கடந்த வாரம் லோக்சபாவில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பான விவாதம் நடந்தது. இந்த வாரம் ராஜ்யசபாவில் அந்த விவாதம் நடைபெறவுள்ளது.
மேலும் காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கை மீதான விவாதமும் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த ஊழலில் பிரதமர் அலுவலகமும் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் பிரதமருக்கும் கூட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கல்மாடி நியமனத்தில் பிரதமர் அலுவலகத்தை சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.