கர்நாடகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு-12 பேர் எதியூரப்பா ஆதரவாளர்கள்-ஷெட்டருக்கு 9 இடம்
கர்நாடகத்தில் எதியூரப்பா மீது சுரங்க ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவரை பதவி விலக பாஜக மேலிடம் உத்தரவிட்டது. இதையடுத்து பெரும் இழுபறிக்குப் பின்னர் பதவியிலிருந்து அகன்றார் எதியூரப்பா. அதன் பின்னர் நடந்த பெரும் நாடகத்திற்குப் பின்னர் எதியூரப்பாவின் ஆதரவைப் பெற்ற, எதியூரப்பா விதித்த நிபந்தனைப்படி சதானந்த கெளடா புதிய முதல்வராகத் தேர்வாகி பதவியேற்றார்.
இந்த நிலையில் அமைச்சர்கள் நியமனத்தில் மீண்டும் சிக்கல் எழுந்தது. தங்களுக்கு 2 துணை முதல்வர்கள் தேவை என்று முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த ஜெகதீஷ் ஷெட்டர் தரப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால் பாஜக மேலிடமும், எதியூரப்பா தரப்பும் ஏற்கவில்லை. இதனால் அமைச்சர்கள் நியமனம் தாமதமாகி வந்தது.
இந்த நிலையில் பாஜக மேலிடம் ஷெட்டர் தரப்பை சமாதானப்படுத்தியது. இதையடுத்து இன்று மாலை புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
அதில் மொத்தம் 21 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 12 பேர் எதியூரப்பா ஆதரவாளர்கள், 9 பேர் ஷெட்டர் ஆதரவாளர்கள். துணை முதல்வர் பதவி யாருக்கும் தரப்படவில்லை.
புதிய அமைச்சரவையில் பழைய அமைச்சர்களில் ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு இடம் தரப்படவில்லை. அதேசமயம், எதியூரப்பாவின் வலது கரமாக திகழும் பெண் அமைச்சர் ஷோபாவுக்கு இடம் கிடைத்துள்ளது.