சாதிக் பாட்சாவின் மரண வழக்கு தற்கொலை வழக்காக மாற்றமா?- சிபிஐ மறுப்பு
சென்னை: முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மரணம் குறித்த வழக்கை தற்கொலை வழக்காக மாற்றப்பட்டதாக வந்த செய்திகளை சிபிஐ மறுத்துள்ளது.
2ஜி வழக்கில் கைதாகி திஹார் சிறையில் இருக்கும் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா. 2ஜி ஊழல் தொடர்பாக அவரிடமும் சிபிஐ விசராணை நடத்தியது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் சாதிக் பாட்சா கைதாகக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். ஆனால் வழக்கு சிபிஐ வசம் மாறிய பிறகு சாதிக் பாட்சா இறப்பதற்கு முன்பு 4 பேர் மதுரையில் இருந்து வந்து அவரைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் இறப்பதற்கு முன் சாதிக் பாட்சா எழுதியதாகக் கிடைத்த கடிதமும் போலி என்று கூறப்பட்டது.
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்று குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பத்தை தீர்க்க டெல்லியில் இருந்து அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழகத்தைச் சேர்ந்த தடய அறிவியல் நிபுணர்கள் சென்னை வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் சாதிக் பாட்சாவின் பிரேதபரிசோதனை அறிக்கை, இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தின் நகல் ஆகியவற்றை ஆய்வு செய்து டெல்லி சிபிஐ போலீசாரிடம் அறிக்கையை சமர்பித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், அந்த அறிக்கையில் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை தான் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் கூறியதாவது,
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டார் என்று டெல்லியில் இருந்து வந்த தடய அறிவியல் நிபுணர்கள் அறிக்கை சமர்பிக்கவில்லை. இது குறித்து டெல்லி சிபிஐ அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலும் கொடுக்கப்படவில்லை என்றனர்.
இது குறித்து சிபிஐ தென் மண்டல இணை இயக்குனர் அசோக்குமார் கூறுகையில், தடய அறிவியல் நிபுணர்கள் இன்னும் எந்த அறிக்கையும் சமர்பிக்கவில்லை. அறிக்கை சமர்பித்த பிறகு நிச்சயமாக உண்மை என்ன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.