நெல்லை மாவட்டத்தில் 755 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை- இந்து அமைப்புகள் ஏற்பாடு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 755 விநாயகர் சிலைகள் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் 4-ம் தேதி சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.
இந்து அமைப்புகள் சார்பில் நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாகக் கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நெல்லை மாநகர், பாளையங்கோட்டை ஒன்றியம், மானூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 504 விநாயகர் சிலைகள் வரும் 31-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து செப்டம்பர் 4-ம் தேதி வரை தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
4-ம் தேதி மாலை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் தாமிரபரணி நதிக்கரையில் கரைக்கப்படுகிறது.