சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
நீதிபதிகள் ஜே.எம். பன்சால், தீபக் வர்மா மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை காலை 10.30மணிக்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யும் தமிழகஅரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. கடந்த வியாழக்கிழமை விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாளை காலை தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு வாதிட்டுள்ளது. அதேசமயம், பெற்றோர்கள் தரப்பில் இந்த ஆண்டே திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். தீர்ப்பு எப்படி அமையப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் நிலவுகிறது.
சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பம் காரணமாக கடந்த 3 மாதங்களாக தமிழக பள்ளிகளில் புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் பொதுவான பாடம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.