திருமங்கலம் சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி பெண் கைது: முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு
ராமநாதபுரம்: திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமியை முதன் முறை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அருகே உள்ள திருமங்கலம் வாகைக்குளத்தை சேர்ந்த 17 வயது பெண் பாண்டிச்செல்வி. அவருக்கு 12 வயதாக இருக்கும்போது திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அப்பெண் வீட்டை விட்டு வெளியேறி திருமங்கலத்தில் ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அவருடன் வேலை பார்த்து வந்த பெண்ணின் தாயார் ஒச்சம்மாள், பாண்டிச்செல்வி மனதை மாற்றி ஒரு விபச்சார புரோக்கரிடம் விற்று விட்டார். அதன் பின்னர் பாண்டிச்செல்வியின் வாழ்க்கை சீர்குலைந்தது. பல்வேறு ஊர்களுக்கு அவர் மாற்றி மாற்றி விற்கப்பட்டு விபச்சாரக் குழியில் தள்ளப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் திமுக நகராட்சித் தலைவர் ஜலீல் உள்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விபச்சார புரோக்கர்களான செல்வி, துரைராஜ், ருக்மணி, பிரியா மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட சுப்பிரமணி, ராமகிருஷ்ணன், சரவணக்குமார் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் உதவி நாடிய சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய ஒச்சம்மாள்(40) தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒச்சம்மாளை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின்போது அவர் கூறியதாவது,
பாண்டிச்செல்வி திருமங்கலத்தில் உசிலம்பட்டி சாலையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த என் மகள் மூலமாகத் தான் அவர் அறிமுகம் ஆனார். அவரது ஏழ்மை நிலையை நான் பயன்படுத்தி ஆசைவார்த்தை காட்டி அவரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி பகுதியைச் சேர்ந்த விபச்சார புரோக்கர் சத்யா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்திற்கு விற்றேன்.
அதன் பிறகு சத்யா பாண்டிச்செல்வியை மதுரை, திருச்சி, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்றார்.
ஒச்சம்மாளிடம் நடத்திய விசாரணையில் இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
போலீசார் ஒச்சம்மாளை ராமநாதபுரம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.