ராமதாஸ் நாடகம் இனியும் வன்னியர்களிடம் எடுபடாது-வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் ராமமூர்த்தி
இடைப்பாடி: வன்னியர்களை இதுவரை ஏமாற்றி வந்த பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ்சின் நாடகம் இனியும் எடுபடாது, வன்னியர்கள் ராமதாஸை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர் என்று, வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
வன்னியர் கூட்டமைப்பு சார்பில், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம், இடைப்பாடியில் நடந்தது.
அப்போது, வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை ராமதாஸ், வன்னியர்களை ஏமாற்றி வந்தார். இனிமேல் அவரது நாடகம் எடுபடாது. முடிந்துவிட்டது. அதனால், வன்னியர்கள் ராமதாஸை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில், ஏழு இடங்களில் போட்டியிட்ட பா.ம.க.வுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அதே போல சட்டசபைத் தேர்தலில் பா.மா.க.,வுக்கு மூன்று இடங்களையே கொடுத்தனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கு 8 சதவீதம் உள்ஒதுக்கீடு, தர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட், ஏழை மக்களுக்கான பட்ஜெட் என்றார் அவர்.