சென்னை ஹோட்டல்களில் வெளிநாட்டவர்கள் தங்கத் தடையில்லை-போலீஸ்
சென்னை: சிங்களர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் ஹோட்டல்கள், விடுதிகளில் தங்க சென்னையில் எந்த தடையும் விதிக்கவில்லை என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, அண்ணா நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில், சில நாட்களுக்கு முன் இலங்கையை சேர்ந்த சிலர் தங்கிருந்தது குறித்து விடுதி நிர்வாகத்தினர் போலீசாரிடம் எந்த தகவல் தெரிவிக்கவில்லை.
வெளிநாட்டவர் விடுதிகளில் தங்கினால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையை கடைபிடிக்குமாறு அந்த விடுதி நிர்வாகத்திற்கு போலீசார் ஆலோசனை வழங்கினர். அதற்கு இலங்கை நாட்டவர் சென்னையில் தங்க போலீசார் தடைவிதித்துள்ளதாக செய்தி பரவிவிட்டது.
வெளிநாட்டவர் சென்னையில் தங்குவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், அவர்களை குறித்து தகவல்கள், தங்கியுள்ள விடுதி நிர்வாகத்தினர் அருகில் உள்ள போலீசாரிடம் தெரிவித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.