ஆட்டம் கண்டது பங்குச் சந்தை... இன்றும் 'சிவப்புதான்'!
என்னதான் பிரதமரும், நிதியமைச்சரும் உறுதி அளித்தாலும், பங்குச் சந்தை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தவே முடியவில்லை. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததுமே மளமளவென 400 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ், அடுத்த சில நிமிடங்களில் அதிகபட்சமாக 558 புள்ளிகளை இழந்து தடுமாறியது.
தேசிய பங்குச் சந்தை நிப்டி கடந்த ஓராண்டில் முதல்முறையாக 5000 புள்ளிகளுக்கு கீழே போனது. அதிகபட்சமாக 172.05 புள்ளிகளை இழந்தது.
மெல்ல மீண்டது...
ஆனால் 10.20க்கு மெல்ல மெல்ல மீட்சியடைய ஆரம்பித்தது. வர்த்தக நேர முடிவில் மீண்டும் ஓரளவு சமாளித்த சந்தை, 132 புள்ளிகளை மட்டும் இழந்து 16,857-ல் முடிந்தது. நிப்டி 45.65 புள்ளிகளை இழந்து 5,072-ல் நிலை பெற்றது. எப்படியோ மீண்டும் 5000 புள்ளிகளை தாண்டியதில் முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்தனர்.
அதே நேரம் ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் படுவீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ஹாங்காங் சந்தை 6.7 சதவீதமும், டோக்யோ 4.4 சதவீதமும், சியோல் சந்தையில் 3.01 சதவீதமும், ஷாங்காய் 1.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.
அமெரிக்காவின் டோவ் சந்தையில் 214 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.