கோத்தபாய ராஜபக்சேவை கண்டிப்பாரா மன்மோகன் சிங்?- நெடுமாறன்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் தமிழக சட்டமன்றத்தையும் வரம்புமீறித் தாக்கியுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் செயலைக் கண்டிக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரியுள்ளார்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரணை கோரி சமீபத்திய தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல், தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
"ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்த அரசியல் நாகரீகமற்ற முறையில் பேசியுள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக முதல்வரை மட்டுமல்ல. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தமிழக சட்டமன்றத்தையும் அவர் இழிவுபடுத்தியுள்ளார். இந்தத் துணிவு அவருக்கு வந்ததற்கு இந்திய அரசே முழுமையான காரணமாகும்.
மாநில முதல்வர்கள் இல்லையென்றால் இந்தியா இல்லை. தமிழக முதல்வரை அவமதிக்கும் போக்கினை அண்டை நாட்டின் அதிகாரி ஒருவர் மேற்கொள்வதை அனுமதிப்பது ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை அவமதிப்பதாகும்.
தமிழக முதல்வரையும் சட்டமன்றத்தையும் வரம்புமீறித் தாக்கியுள்ள கோத்தபாய ராஜபக்சேவின் செயலைக் கண்டிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவேண்டும் என்று கூறியுள்ளார்.