அமெரிக்க பங்குச் சந்தை மோசடி-ராஜரத்தினத்துக்கு 24 வருட சிறை தண்டனை வழங்கப்படுமா?
இலங்கைத் தமிழரான ராஜரத்தினம் (வயது 54), அமெரிக்காவின் சேஸ் மன்ஹட்டன் வங்கியில் சேர்ந்து அதன் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தவர். இதையடுத்து கலியோன் என்ற 'ஹெட்ஜ் பண்ட்' (பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்படும்போது அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க பல வகையான நிதி ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள் தான் ஹெட்ஜ் பண்ட்) நிறுவனத்தைத் துவக்கினார்.
இங்கு பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அந்த நிறுவனங்களின் உள் நிலவரங்களை (நிதி நிலைமை, வர்த்தக நிலைமை, லாப-நஷ்டம்) முறைகேடான வழிகளில் உளவு பார்த்துள்ளார்.
இந்த விவரங்களை கையில் வைத்துக் கொண்டு, பங்குச் சந்தைகளில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடுகளைச் செய்துள்ளார். இதன்மூலம் பல மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார். இவரது செயல் இன்சைடர் டிரேடிங் விதிகளின்படி மிக மோசடியான செயலாகும்.
2007ம் ஆண்டு இவரது நிறுவனத்தின் மதிப்பு ரூ. 35,000 கோடியை எட்டியது. இந் நிலையில் இவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அமெரிக்க நிதித்துறையினர் இவரை கண்காணிக்க ஆரம்பித்தனர். இவரது தொலைபேசிகள், பேக்ஸ், மெயில் ஆகியவை உளவு பார்க்கப்பட்டபோது, இவரது மோசடிகள் அம்பலத்துக்கு வந்தன.
கிட்டத்தட்ட இவரை 1 வருடமான ரகசியமாக கண்காணித்த நிதித்துறையினரும் போலீசாரும் 2009ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றத்தில் முறைப்படி வழக்குத் தொடர்ந்தனர். இவர் மீது 14 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
12 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் இவரை குற்றவாளி என அறிவித்ததையடுத்து, இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவி்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் ராஜரத்தினம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில் அவருக்கு 24.5 வருட சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு ராஜரத்தினம் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பல உடல் உபாதைகளுடன் தவித்து வரும் ராஜரத்தினத்தை அத்தனை வருடங்கள் சிறையில் வைப்பது மரண தண்டனைக்கு சமமானது என்று அவர்கள் வாதாடினர்.
இந்த வழக்கில் வரும் செப்டபம்பர் 27ம் தேதி நீதிபதி ரிச்சர்ட் ஹோவல் தீர்ப்பு வழங்கவுள்ளார்.