மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடி போராட்டம்: வெள்ளையன்
மதுரை: சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தி வருவதாக வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
வணிகர் சங்கங்கள் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த முடிவு வருந்தத்தகக்கது, கண்டிக்கதக்கது. மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, தமிழகமெங்கும் உள்ள வணிகர்கள், மத்திய அரசுசை கண்டித்து கறுப்புக் கொடி ஏற்றி வருகின்றனர். இவ்வாறு ஏற்றப்படும் கருப்புக் கொடிகள் ஆகஸ்ட் 14 ம் தேதி மாலை 5.30 மணிக்கு இறக்கப்படும். ஆனால், அதே கம்பத்தில் 15ம் தேதி தேசியக் கொடி ஏற்றி சுதந்திரம் காப்போம் என்று உறுதிமொழி ஏற்க உள்ளோம்.
சில பகுதிகளில் போலீசார் கறுப்புக்கொடி ஏற்றுவதை தடைசெய்ய முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஒலிப்பெருக்கி பயன்படுத்தாத நிலையில் கறுப்புக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை போலீசார் தடை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.