சிறுமி பலாத்காரம்: கேரளா ஐஜி சதி செய்து சிக்க வைத்தார்- குமரி கான்டிராக்டர் மணிகண்டன்
திருவனந்தபுரம்: கேரளா ஐஜி டோமின் தங்கச்சரி சதி செய்து தன்னை சிறுமி பலாத்கார வழக்கில் சிக்க வைத்துள்ளதாக குமரி கான்டிராக்டர் மணிகண்டன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரள மாநிலம் பரவூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குமரி மாவட்ட கான்டிராக்டர் மணிகண்டன் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய குமரி இன்ஸ்பெக்டர் சக்திவேல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தனது சகோதரர் தேவராஜன் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
எனக்கு குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் 9.72 ஏக்கர் நிலம் உள்ளது. கேரளாவில் உள்ள ஏபி்ஜே டெவலப்பர் நிறுவனம் எனது நிலத்தை வாங்க முன்வந்தது. கேரளா ஐஜி டோமின் தங்கசாரியும், அவருடைய மனைவி ஆன் தங்கசாரியும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். அவர்கள் நிலத்துக்காக ஒரு தொகையை பேசி ரூ.1கோடி முன் பணம் கொடுத்தனர்.
பிறகு பேசி முடித்த தொகையை விட மிகக் குறைந்த விலைக்கு நிலத்தை கேட்டனர். நான் மறுத்துவிட்டேன். அதற்கு பழி வாங்கவே இந்த பலாத்கார வழக்கில் ஐஜி சதி செய்து என்னை சிக்க வைத்துவி்ட்டார். இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி ராமசந்திர மேனன் கேரள அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.