மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் வென்றதை எதிர்த்து சைதை துரைசாமி வழக்கு
சென்னை : திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சட்டசபைத் தேர்தலில் தொகுதி மாறி கொளத்தூரில் போட்டியிட்ட ஸ்டாலின், 2,734 ஓட்டுக்கள் மட்டுமே அதிகம் பெற்று துரைசாமியை தோற்கடித்தார்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் துரைசாமி. அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்து மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதால், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சைதை துரைசாமி கூறியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், ஸ்டாலினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதேபோல திருவண்ணாமலையில் எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு, திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவின் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த வழக்கு, எழும்பூரில், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி வெற்றியை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சித் தொடர்ந்த வழக்கு ஆகியவையும் நீதிபதி வெங்கட்ராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அவற்றிலும் விளக்கம் கேட்டு நோ்ட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
அனைத்து பிரதிவாதிகளுக்கும் பதிலளிக்க 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.