லாபப் பாதைக்குத் திரும்பியது மகிந்திரா சத்யம் நிறுவனம்
ஜூன் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் சத்யம் நிறுவனம் லாபத்தை பார்த்துள்ளதாக நய்யார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் பொறுமையுடன் கூடிய செயல்பாடுகளே நிறுவனம் லாபப் பாதைக்குத் திரும்ப முக்கியக் காரணம் என்றார்.
ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சத்யம் நிறுவனத்தை கடந்த 2009ம் ஆண்டு மகிந்திரா நிறுவனம் வாங்கியது நினைவிருக்கலாம். இந்த நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 225.1 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த மார்ச் மாத காலாண்டில் இந்த நிறுவனத்தின் நஷ்டக் கணக்கு ரூ. 327 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சத்யத்தின் வருவாய் ரூ. 1434 கோடியாக இருந்தது. இது கடந்த காலாண்டை விட 4.3 சதவீதம் அதிகமாகும்.
ஜூன் மாத காலாண்டில் ரூ. 98 கோடி அளவுக்கு லாபம் ஈட்டுவோம் என முன்பு சத்யம் நிறுவனம் கூறியிருந்தது. இருப்பினும் அதை விட அதிக அளவிலான லாபத்தை ஈட்டியுள்ளது.