தந்தையைக் கொன்ற பாக். விமானியை மன்னித்த இந்திய விமானப்படை விமானி மகள்
டெல்லி: 1965-ம் ஆண்டு போரின்போது குஜராத் முதல்வர் சென்ற விமானத்தை சுட்டுத் தள்ளிய பாகிஸ்தான் விமானி 46 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டார். அவரை மன்னித்துவிட்டதாக அந்த விமானத்தை ஓட்டிய விமானியின் மகள் பரீதா சிங் தெரிவித்துள்ளார்.
1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருக்கையில் அப்போதைய குஜராத் முதல்வர் பல்வந்த்ராய் மேத்தா, அவரது மனைவி சரோஜ்பென் மேத்தா, 3 அரசு அதிகாரிகள், விமானப் பணியாளர், குஜராத் சமாச்சார் நிருபர், ஏர் இந்தியா விமானி ஜஹாங்கீர் என்ஜினியர் ஆகியோர் சென்ற விமானம் பாகிஸ்தானியர்களால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த அனைவருமே பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நடந்து 46 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அந்த விமானத்தை சுட்ட பாகிஸ்தான் விமானி குவாய்ஸ் ஹுசைன்(70), ஜஹாங்கீர் என்ஜீனியரின் மகளுக்கு மன்னிப்புக் கேட்டு கடந்த 5-ம் தேதி இமெயில் அனுப்பினார். அதற்கு அவரை மன்னித்துவிட்டதாக பதில் அனுப்பியுள்ளார் ஜஹாங்கீரின் மகள் பரீதா சிங்.
இந்தியா, பாகிஸ்தான் மக்களிடையே மன்னிக்கும் தன்மையை அதிகரிக்க என் தந்தை மன்னிப்பைத் தான் விரும்பியிருப்பார் என்று அந்த இ மெயிலில் பரீதா தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் சென்ற விமானம் என்று எனக்கு தெரியாது. அந்த விமானம் இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லையில் வருவதும், போவதுமாக இருந்ததால் உளவு விமானம் என்று நினைத்து சுட்டேன். இவ்வாறு பாகிஸ்தான் விமானி அந்த இ மெயிலில் எழுதியிருந்தார்.