பாகிஸ்தான் சுதந்திர தின அணிவகுப்பில் தீவரவாதிகள் தாக்குதல்-3 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் 65வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சுதந்திர தின அணிவகுப்பின்போது தீவரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்த வெள்ளையர்கள், நாட்டை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை பாகிஸ்தானாக அறிவித்தனர். பாகிஸ்தானுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியும், இந்தியாவுக்கு 15ம் தேதியும் சுதந்திரம் அளித்தது வெள்ளையர் அரசு.
இன்று பாகிஸ்தான் தனது 65வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஒரு ராணுவ முகாமில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். அப்போது திடீரென தீவிரவாதிகள் புகுந்து தாக்கினர். இதில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர். மிரன்ஷா என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்தது.
ராணுவத்தினர் மீது ராக்கெட்களை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று செய்திகள் கூறுகின்றன. அதேபோல வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ரஸ்மக் என்ற இடத்திலும் ராணுவ நிலை மீது தீவிரவாதிகள் தாக்கினர். அதில் எத்தனை பேர் செத்தனர் என்பது தெரியவில்லை.