ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் சமச்சீர் கல்வியை நடத்துவார்களா?-அதிமுக கேள்வி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அசோகன் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்களை 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடத்திட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி கூட்டங்கள் நடத்தப்படுகிறது. தி.மு.கவும் ஒரு கூட்டத்தை அறிவித்துள்ளது.
சமச்சீர்கல்வி வெற்றி விழா. கருணாநிதி அரசால் கொண்டுவரப்பட்டிருந்த சமச்சீர் கல்வித்திட்ட பாடங்களில் சமமும் இல்லை சீருமில்லை. அந்த பாடங்களில் கருணாநிதியைப் பற்றிய பாடங்களும், அவரது மகள் கனிமொழியின் கவிதைகளும் தான் இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வெற்றியைக் கொண்டாடத்தான் சமச்சீர் கல்வி வெற்றி விழாக் கூட்டங்களை நடத்திட தி.மு.க முன்வந்துள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதி குடும்ப சொத்து பற்றி பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்தவுடன் கருணாநிதி ஆவேசப்படுகிறார். கருணாநிதி குடும்பத்தின் பாதி சொத்துக்கள் பற்றி முழுமையான செய்திகள் நிரம்பவுள்ளன.
சென்னையில் மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமான சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடம் உள்ளது. அந்தப் பள்ளிக்கூடத்தில் ஸ்டாலின் சமச்சீர் கல்வியை நடத்துவாரா? கருணாநிதி குடும்பத்தில் யாராவது ஐ.ஏ.எஸ் அதிகாரியானதுண்டா? பொறியாளரானதுண்டா? தப்பித்தவறி டாக்டருக்கு படித்திருந்தாலும் அவர்கள் தப்பான வழியில் தான் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.
அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க வை தனது குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டவர் கருணாநிதி. தி.மு.க.வினரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்கிறார்கள் என்கிறார். தவறு செய்தவர்களை குண்டர்கள் சட்டத்தில்தான் கைது செய்வார்கள்.
தி.மு.கவை வளர்த்தவர்களின் குடும்பத்தினர்கள் இன்று முதல்வர் ஜெயலலிதா பக்கம்தான் உள்ளார்கள். அண்ணா தனது குடும்பத்தினர் யாரையாவது கட்சிப் பதவியிலோ ஆட்சிப் பதவியிலோ இடம் கொடுத்தாரா? ஆனால் கருணாநிதிதான் தி.மு.க. கட்சிப் பதவி, தமிழக ஆட்சிப் பதவி, மத்திய ஆட்சியில் பதவி என தனது குடும்பத்தினரை அமர வைத்தவர்.
எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் தனது வாரிசுகளை மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆக்கியிருக்க முடியாதா? எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கு சிறுநீரகம் கொடுத்த லீலாவதியை பெரிய பதவியில் அமர வைத்திருக்க முடியாதா?
அண்ணாவும் ,எம்.ஜி.ஆரும் நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்த தலைவர்கள். அவர்கள் வழியில் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்காகத்தான் தி.மு.க.வினர் இன்று ஜெயில் ஜெயிலாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. பொய் வழக்கு போடவில்லை. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் பேரில் தான் போலீசார் தி.மு.க.வினரை கைது செய்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள ஆ.ராசாவை தனது மகள் கனிமொழியை விடுவிக்க வேண்டுமென்பதற்காக வழக்கறிஞரை வைத்து எல்லா தவறுகளுக்கும் ஆ.ராசாதான் பொறுப்பு என வாதாட வைத்தவர்தான் கருணாநிதி.
தமிழகத்தினுடைய வரலாற்றிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தந்த ஒரே முதல்வர் என்ற பெருமை முதல்வர் ஜெயலலிதாவைத்தான் சாரும் என்றார் அசோகன்.