18-ம் தேதி நள்ளிரவு முதல் லாரி ஸ்ட்ரைக்... பொருட்கள் விலை உயரும் அபாயம்!
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ள இந்த போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை மாநிலங்களில் லாரிகள் ஓடாது என்றும் தென் மாநிலங்களில் 25 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர் சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி லாரிகள் ஸ்டிரைக் தொடங்கும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
லாரி ஸ்டிரைக் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் சரக்கு அனுப்புவதற்காக புக்கிங்குகள் நிறுத்தப்பட்டு விட்டன. இன்றும் நாளையும் மட்டும் சரக்கு போக்குவரத்து நடைபெறும். அதன்பிறகு அனைத்து சரக்குகள் போக்குவரத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஸ்டிரைக்கில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 3 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என்று அதன் தலைவர் நல்ல தம்பி அறிவித்துள்ளார்.
இதேபோல் மணல் லாரிகள், முட்டை லாரிகளும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வராசா மணி இந்த ஸ்டிரைக்குக்கு ஆதரவு தெரிவித்து 19-ந் தேதி, 20-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு மணல் லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளார்.
ஆனால் தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜா கூறும்போது, லாரி ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம் என்றார்.
லாரி ஸ்டிரைக் காரணமாக காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கி அவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 18-ந் தேதி நள்ளிரவு முதல் ஸ்டிரைக் என்பதால் 17-ந் தேதி முதலே வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் வராது.
26 லட்சம் லாரிகள் மூலம் அரசுக்கு தினமும் நேரடியாகவும், மறைமுகணமாகவும் ரூ. 2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
இதே போல் லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 1000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மொத்தத்தில் லாரி ஸ்டிரைக் காரணமாக ஒருநாளைக்கு ரூ.3500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.