சொந்த ஜாமீனில் செல்ல மறுத்தார் கிரண் பேடி- தான் சீரமைத்த திஹார் சிறையிலேயே அடைக்கப்படுகிறார்
அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினர் கிரண் பேடி. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, டெல்லி காவல்துறை ஆணையர் பதவியை தனக்குத் தராமல் காங்கிரஸ் அரசு பாரபட்சம் செய்ததால் அதிருப்தி அடைந்து பதவியிலிருந்து விலகினார்.
திஹார் சிறையின் டைரக்டர் ஜெனரலாக இவர் இருந்தபோதுதான் சிறையை முழுமையாக சீரமைத்தார். அங்கு கைதிகளை அடிமைகள் போல அடைத்திருந்த நிலையை முழுமையாக மாற்றி நாட்டில் உள்ள சிறைகளுக்கெல்லாம் முன்னுதாரணமாக மாற்றியமைத்தார். இந்த நிலையில் அதேசிறையில் தற்போது அவர் அடைக்கப்படவுள்ளார்.
அன்னா ஹஸாரே குழுவில் இடம் பெற்றுல ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதாவுக்காகவும் போராடி வருகிறார் பேடி. இன்று காலை அவர் ராஜ்காட்டுக்கு வந்தபோது அவரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் சொந்த ஜாமீன் கொடுத்து விட்டு செல்லலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதை கிரண் பேடி நிராகரித்து விட்டார். தான் சொந்த ஜாமீனில் விடுதலையாக விரும்பவில்லை என்று கூறி விட்டார்.
இதனால் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர் போலீஸார்.
இதுகுறித்து கிரண் பேடி கூறுகையில், என்னை சொந்த ஜாமீனில் செல்லுமாறு கேட்டனர். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதனால் திஹார் சிறையில் நான் அடைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.