கோத்தபயா ராஜபக்சேவின் அநாகரீக பேச்சிற்கு இல. கணேசன் கடும் கண்டனம்
ராமநாதபுரம்: மஹிந்தா ராஜபக்சேவின் தம்பி கோத்தபயா ராஜபக்சேவின் அநாகரீக பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமநாதபுரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழர்கள் மீது இலங்கை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு திமிர் போக்கை கடைபிடித்து வருவது சரியல்ல.
கோத்தபயா ராஜபக்சேவின் அநாகரீகமான பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு உடனே செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 75 ஆயிரம் இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். இவர்களது சொத்துக்களை பத்திரமாக கொண்டு செல்ல தனிக் கப்பல் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
தமிழகர் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து லோக்சபாவில் பாஜக பிரச்சனை எழுப்பும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை பெற்றுத் தர போராடுவோம்.
ஊழலுக்கு எதிராகப் போராடும் அன்னா ஹஸாரேவிற்கு பின்புலமாக பாஜக நிற்கும். பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான லோக்பால் மசோதா வேண்டும் என்று கூறுவதை வைத்து பார்க்கும் போது, தற்போதைய லோக்பால் பல் இல்லாதது என்று தான் எண்ணத் தோன்றுகிறது என்றார்.