சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத பள்ளி ஆசிரியருக்கு மெமோ
ஏர்வாடி: ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றாத ஆசிரியருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய தொத்தமகன் வாடி கிராமத்தில் கடலாடி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 13 மாணவிகள் உள்பட 33 பேர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சாமுவேல் என்பவர் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
மாணவ-மாணவியர் அனைவரும் சுதந்திர தினத்தன்று கொடியேற்று விழாவில் கலந்துகொள்வதற்காக காலை 8. 30 மணி்க்கு பள்ளிக்கு வந்துவிட்டனர். ஆனால் ஆசிரியர் சாமுவேல் வராததால் அவர்கள் 10 மணி வரை பள்ளிக்கு வெளியே காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதன் பின்பு சாவகாசமாக வந்த ஆசிரியரை கிராம இளைஞர்களும், மகளிர் சங்க பெண்களும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பூலோக சுந்தரவிஜயன் கூறுகையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரை அனுப்பி இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து கடலாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் துரைராஜ் அன்று மதியமே பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தி ஆசிரியர் சாமுவேலுக்கு மெமோ வழங்கினார். பள்ளிக்கு புதிய ஆசிரியர் நாளை (16-ம் தேதி) முதல் நியமிக்கப்படுவதாக பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்தார்.