அமைச்சர் பதவியிலிருந்து ப.சிதம்பரம் விலக வேண்டும்- ராம.கோபாலன்
விழுப்புரம்: அன்னா ஹசாரே போராட்டத்திற்கு மத்திய அரசால் சரியான தீர்வு காண முடியாத மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அன்னா ஹசாரே போராட்டத்திற்கு மத்திய அரசால் சரியான தீர்வு காண முடியவில்லை. முதுகெலும்பு இல்லாத அரசாக மன்மோகன் சிங் அரசு செயல்பட்டு வருகின்றது. கைது செய்யும் அளவிற்கு அன்னா ஹசாரே எந்த குற்றமும் செய்யவில்லை. ஜனநாயக நாட்டில், அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.
பாகிஸ்தான் பிரச்னையில் மத்திய அரசு தொடை நடுங்கியாக செயல்படுவது போன்றே, அன்னா ஹசாரே விஷயத்திலும் செயல்படுகிறது. லோக் சபாவில், என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செயல்பட்டு வருகிறார்.
அன்னா ஹசாரே விஷயத்தில், உறுதியான முடிவுகளை எடுக்க முடியாத ப.சிதம்பரம், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் அவர்.